Tuesday, 10 April 2012
மட்டைப்பந்து(07.10.2011)
பிச்சினிக்காடு இளங்கோ
விளையாட்டு எனில்
விளையாட்டுதான்
விளையாட்டு வேறுபடும்
வேறுபடுத்தக்கூடாது விளையாட்டை
எல்லாம்
விளையாட்டுதான்
ஆனால்
ஒரே ஒரு விளையாட்டைமட்டும்
விளையாட்டாய்க் கருதி
வேடிக்கைப்பார்ப்பது எப்படி?
அதற்குமட்டும்
அவ்வளவு விரயம் ஏன்?
பணம் விளையாடுகிறதே தவிர
மனமும் உடலும் விளையாடவில்லையே
வியர்வை வெள்ளம்
பெருக்கெடுத்ததுண்டா?
அடமழையில் நனந்ததுபோல்
ஆனதுண்டா வீரர்கள்?
ஆடியதுண்டா?
ஆடும் சூழலுண்டா?
இதயம், இரத்தம்
நரம்பு நாளம்
எலும்பு தசை
தலை கால்
கை இப்படித்
தலைமுதல் அடிவரை
பங்கேற்கும் விளையாட்டா?
எப்படியெல்லாம்
காலத்தை விரயம் செய்கிறோம்
எப்படியெல்லாம் பணம்
விளையாடுகிறது
காரணம் அதில்
வியாபாரம் இருப்பதுதான்
தெற்கு வடக்கு
விளையாடும் விளையாட்டில்
சாதியும்கூட விளையாடுகிறதாம்
இது ரகசியம்
பொழுதுபோக்காக விளையாடுவதை
யார்விரும்ப மாட்டார்கள்?
விளையாடிப் பொழுதுபோக்காத
மனம் என்ன மனமோ!
பொழுதும் கரையணும்
மனமும் உடலும்
கலந்து கரையணும்
அதுதான் விளையாட்டு
உலகமே உற்றுப்பார்க்கும்
அதிசயமா அந்த விளையாட்டு?
அதிசய விளையாட்டா அது?
நேரத்தை
வீணாக்கத்தெரிந்தவர்கள்
விளையாடும் விளையாட்டு
நம்முடைய ரசிப்புத்தன்மைக்குக்கூட
நேர்மை நாணய நாகரிகமில்லை
திரைப்படமும் மட்டைப்பந்தும்
நமக்கு ஒன்றுதான்
நாம் மட்டமான ரசிகர்களே தவிர
எடைபோடும் மனிதர்கள் அல்ல
இந்தியா தங்கம்பெற
எத்துணை வழிகள்!
அனைத்தையும் அடைத்துவிட்டு
இப்படி மைதானத்தில்
பட்டிமாடுகளாய் அலைவது
நியாயமா?
மந்தை ஆடுகளே தவிர
நாம்
சிந்திக்கும் ஜீவன்கள் அல்ல
அரசியலைப்போல்
அதிலும் ஊழல்
சோம்பேறிகளின் சூழ்ச்சி
சூது
தங்கம் பெற்றுவரும்
தங்கங்கங்களை கவனிப்பதில்லை
மைதானத்தைக்குறைசொல்லும்
சுயமைதுனக்காரர்களைக்
தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம்
வெட்கமின்றி
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
ஒரு விளையாட்டை
அது ஒரு விளையாட்டு
அது ஒரு சிலரின் விளையாட்டு
அதிலும் இன்பமுண்டு
அவ்வளவுதான்
தேசத்தின் விளையாட்டல்ல
அது
தேசப்பெருமைக்குரிய
விளையாட்டும்மல்ல
மின்சாரத்தை
நேரத்தை வீணாக்கும்
வீண்வேலை
விழியிருந்தும்
பார்வையற்ற தேசம்
பாவமிகு ஜென்பம்
நாமன்றி யாருமில்லை
Monday, 5 March 2012
யாத்திரை …..
பிச்சினிக்காடு இளங்கோ( 17.11.2011)
எல்லாக் காலத்தும்
இயங்கும் நிலையில்
மனமும் இல்லை
உடலும் இல்லை
எண்ணமும் நிகழ்வும்
வேறு வேறாய்
அலுப்புத்தட்டிவிடுகிறது
அவ்வப்போது
எல்லாம் ஈர்ப்பதுமில்லை
எல்லாவற்றிலும் இழப்பதுமில்லை
வழிதெரிந்தாலும்
பயணம் சாத்தியமில்லை
அக்கம் பக்கம்
சாதகமானாலும்
மனம் ஏனோ
அடம்பிடிக்கிறது
அது ஒரு
ஞானப்பெட்டகம்
பட்டறிவின் குவியல்
கிரியா ஊக்கி
வரும் தலைமுறைக்கான
சுரங்கம்
என்ன செய்வது?
கையில் எடுத்தால்
முதலில்
பார்ப்பதே நிகழ்கிறது
பக்கம் எத்தனை என்பதே
கேள்வியாகிறது
இத்தனையும் கடந்துதான்
யாத்திரை நிகழ்கிறது
Wednesday, 29 February 2012
நவீனம்
நவீனம்( 15.09.2011 இரவு 10மணிமாலை)
பிச்சினிக்காடு இளங்கோ
உங்களுக்கே தெரிந்த
குறியீடுகளை காட்டுங்கள்
மடிமப்படுத்துங்கள்
மனவெளி மின்னல்களை
அகவயத்தேடல்களை
சித்திரமாக்குங்கள்
உங்கள் மொழியில்
நடந்துசெல்லுங்கள்
விருப்பம்போல
நடந்து திரும்புங்கள்
பத்திரப்படுத்துங்கள்
எந்தத் திறவுகோலுமின்றி
வீடு கட்டுங்கள்
ஜன்னல்கள் இன்றி
முட்டி மோதி
ரத்தம்கட்டிய நெற்றியோடு
அதை
எத்துணை அடைமொழியோடும்
அழைக்க
நாங்கள் தயார்
கருத்தரங்குகள்
காத்திருக்கின்றன
லாபமுமில்லை
நட்டமுமில்லை யார்க்கும்
ஆனாலும்
உங்கள் கவிதை
எல்லாரின் ஆய்விலும்
எடுத்துக்காட்டாய்
இடம்பெறும் லாபம் உங்களுக்கு
அரசியல்
அரசியல்
(01.02.2011 முற்கலில் சாரு நிவேதிதா எழுதிய சீரோ டிகிரி படித்துமுடிக்கும் தருவாயில் எழுதிய கவிதை.)
பிச்சினிக்காடு இளங்கோ
எல்லா இடத்திலும்
ஓர் அரசியல்
எல்லார் இடத்திலும்
ஓர் அரசியல்
யாருக்கும் தெரியாது
என்பதே
பலம் எனக்கருதும் பரிதாபம்
தெரிந்துகொண்டவர்கள்
ரகசியமாக நடத்துகிறார்கள்
அரசியலை
அரசியலும் அரசியலும்
மோதும்போதுதான்
சொல்லிக்கொள்ளமுடியாமல்
தவிக்கிறது மனம்
அரசியலை
நடத்துவது வேறு
புரிந்துகொள்வது வேறு
என் எதிர்நோக்கி
அரசியல் வரும்போதுதான்
நான் புரிந்துகொண்ட அரசியலைப்
பயன்படுத்துகிறேன்
அதுவரை
புரிந்துகொண்டவனாகவே
கடத்துகிறேன்
அரசியலைப்
புரிந்துகொள்ளாமல் வாழ்வது
சிரமம்
அரசியல்
இல்லாத வாழ்க்கை
சுகமானது
தன்னிடமிருக்கும்
அரசியல் ஆயுதத்தை
மறைத்துக்கொள்வதில்
ஓர் அரசியல்
இருக்கிறது
அந்த ரகசியம்
அரசியல் என்பது
எனக்கு ரகசியமல்ல
வாழ்க்கையில் அரசியல்
வரும் போகும்
அரசியலை
வாழ்க்கையாகக்கொண்டவர்கள்
வாழ்கிறார்கள் என்பது
மாயை
எனக்கு
அந்த
ரகசியம் புரிகிறது
அது
எல்லா இடத்திலும்
ஓர்
அரசியல் இருக்கிறது
என்பதுதான்
Monday, 27 February 2012
இங்கிலாந்தே வணக்கம்
இங்கிலாந்தே வணக்கம்
பிச்சினிக்காடு இளங்கோ(17.06.2011)
நீ எங்களை
அடிமைப்படுத்தினாய்
ஆனால்
கொடுமைப்படுத்தவில்லை
எங்களையும்
எங்கள் மண்ணையும்
செல்வத்தையும் சுரண்டினாய்
துயரப்படுத்தவில்லை
உங்கள் வசதிக்காக
அமைத்துக்கொண்ட வாழ்க்கையில்
எங்கள் நாடு
வசதியும் வடிவமும் பெற்றது
வேதனைப்படுத்தவில்லை
நீங்கள் ஏற்படுத்திய அடையாளங்கள்
இன்னும் எங்களோடு
பெருமிதத்தோடு…
எங்கள் மண்ணில்
எங்கள் வியர்வையில்
விளைந்ததைக் கேட்டபோது
யார் நீ
என்ற கேள்விப்பிறந்தது
பூலித்தேவன் போன்ற
தூயவீரர்களால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை
வ,உ.சி போன்ற
கவரிமான்களால்
காலம்கழிக்க முடியவில்லை
பகத்சிங்போன்ற
இளம்சூரியன்களை
இழந்தோம்
எங்கள் சுயம்
சுதந்தரம் கேள்விக்குறியானது
தன்மானம்
தலைமைதாங்கியது
சுகத்தைக்காட்டிலும்
சுதந்தரம்தான் அடையாளம்
உணவைக்காட்டிலும்
உணர்வுதான் உயிர்
அடிமையாய்
முகவரி!
ஆயிரமிருந்துமென்ன?
உதிரத்தில் சூடும்
உள்ளத்தில் கொதிப்பும் கூடியது
ஒத்த உணர்வுடையோர்
ஒருங்கிணைந்தனர்
உரத்தகுரல் எழுப்பினர்
உடமை இழந்தனர்
உயிர்துறந்தனர்
இந்தியா என்பது
முகவரியானது
எங்களைப்போல்தான்
முகவரிதேடி ஈழத்தில் போர்
உங்கள் இடத்தில்
ராஜபக்சே
நாங்கள் இப்போது
ராஜபக்சே பக்கம்
நீங்கள் இப்போது
ஈழத்துப்பக்கம்
கொடுத்தவர்
கேட்பவர் பக்கம்
கேட்டவர்கள்
கொடுப்பவர் பக்கம்
கொடுக்காதவரின் அட்டூழியங்களை
அம்பலப்படுத்த
குரல்கொடுக்கிறீர்கள்
கொடுக்காத கொடியவர்க்கு
கொன்றொழித்த கயவனுக்கு
நாங்கள்
கொடிபிடிக்கிறோம்
கம்பளம் விரித்து
காலில் விழுகிறோம்
இதன் பெயர்
அரசியல் முரண்தொடையா?
ஈன முடிவெடுப்பா?
வஞ்சகக் கூட்டணியா?
எங்கள் நிலையை
எப்படிச்சொல்வது
எங்களை
எப்படியும்
சொல்லிவிட்டுப்போங்கள்
கொடுங்கோலனை
குற்றவாளியென
நிலைநிறுத்த நிற்கும்
இங்கிலாந்தே
உனக்கு வணக்கம்
ஒரு காலம்
ஒருகாலம்
பிச்சினிக்காடு இளங்கோ
படுக்கை விரிப்பை
எடுத்து உதறி
தயார்செய்தது…
படுக்கையறையில்
தலையணை அருகில்
தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்தது..
இருக்கையில் உட்காரவைத்துப்
பரிமாறியது…
இலையில்
குறைய குறைய எடுத்துவைத்தது..
அடுத்தவேளைக்கு
என்ன வேண்டும்?
விருப்பம்கேட்டு சமைத்தது…
நாளைக்கு நான் உடுத்தும்
உடையைத் தயார்செய்தது
குளிக்கும்வரை காத்திருந்து
உதவிசெய்தது எல்லாம்
மழையின் சாரலாய் ஈரப்படுத்துகிறது
வீட்டுக்குவெளியே இருந்து
தனியாய் சாப்பிடும்போது
08.07.2011)
Sunday, 26 February 2012
நீ9ர்)தான்
நீ(ர்)தான்….
பிச்சினிக்காடு இளங்கோ 08.08.09
எப்போதும்
எங்களோடு இருப்பது
நீயா? இறைவனா?
எப்போதும்
எங்களுக்குத் தேவை
நீயா? இறைவனா?
எங்களை வாழவைப்பது
நீயா? இறைவனா?
எங்களை இயக்குவதும்
எங்களுக்காக இயங்குவதும்
நீயா? இறைவனா?
உணவுக்கும் தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ? இறைவனா?
உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?
நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?
ஐயமில்லை
அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்…
“நீதான்….நீதான்
நீர்தான்…நீர்தான்”
Subscribe to:
Posts (Atom)