Tuesday, 10 April 2012
மட்டைப்பந்து(07.10.2011)
பிச்சினிக்காடு இளங்கோ
விளையாட்டு எனில்
விளையாட்டுதான்
விளையாட்டு வேறுபடும்
வேறுபடுத்தக்கூடாது விளையாட்டை
எல்லாம்
விளையாட்டுதான்
ஆனால்
ஒரே ஒரு விளையாட்டைமட்டும்
விளையாட்டாய்க் கருதி
வேடிக்கைப்பார்ப்பது எப்படி?
அதற்குமட்டும்
அவ்வளவு விரயம் ஏன்?
பணம் விளையாடுகிறதே தவிர
மனமும் உடலும் விளையாடவில்லையே
வியர்வை வெள்ளம்
பெருக்கெடுத்ததுண்டா?
அடமழையில் நனந்ததுபோல்
ஆனதுண்டா வீரர்கள்?
ஆடியதுண்டா?
ஆடும் சூழலுண்டா?
இதயம், இரத்தம்
நரம்பு நாளம்
எலும்பு தசை
தலை கால்
கை இப்படித்
தலைமுதல் அடிவரை
பங்கேற்கும் விளையாட்டா?
எப்படியெல்லாம்
காலத்தை விரயம் செய்கிறோம்
எப்படியெல்லாம் பணம்
விளையாடுகிறது
காரணம் அதில்
வியாபாரம் இருப்பதுதான்
தெற்கு வடக்கு
விளையாடும் விளையாட்டில்
சாதியும்கூட விளையாடுகிறதாம்
இது ரகசியம்
பொழுதுபோக்காக விளையாடுவதை
யார்விரும்ப மாட்டார்கள்?
விளையாடிப் பொழுதுபோக்காத
மனம் என்ன மனமோ!
பொழுதும் கரையணும்
மனமும் உடலும்
கலந்து கரையணும்
அதுதான் விளையாட்டு
உலகமே உற்றுப்பார்க்கும்
அதிசயமா அந்த விளையாட்டு?
அதிசய விளையாட்டா அது?
நேரத்தை
வீணாக்கத்தெரிந்தவர்கள்
விளையாடும் விளையாட்டு
நம்முடைய ரசிப்புத்தன்மைக்குக்கூட
நேர்மை நாணய நாகரிகமில்லை
திரைப்படமும் மட்டைப்பந்தும்
நமக்கு ஒன்றுதான்
நாம் மட்டமான ரசிகர்களே தவிர
எடைபோடும் மனிதர்கள் அல்ல
இந்தியா தங்கம்பெற
எத்துணை வழிகள்!
அனைத்தையும் அடைத்துவிட்டு
இப்படி மைதானத்தில்
பட்டிமாடுகளாய் அலைவது
நியாயமா?
மந்தை ஆடுகளே தவிர
நாம்
சிந்திக்கும் ஜீவன்கள் அல்ல
அரசியலைப்போல்
அதிலும் ஊழல்
சோம்பேறிகளின் சூழ்ச்சி
சூது
தங்கம் பெற்றுவரும்
தங்கங்கங்களை கவனிப்பதில்லை
மைதானத்தைக்குறைசொல்லும்
சுயமைதுனக்காரர்களைக்
தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம்
வெட்கமின்றி
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
ஒரு விளையாட்டை
அது ஒரு விளையாட்டு
அது ஒரு சிலரின் விளையாட்டு
அதிலும் இன்பமுண்டு
அவ்வளவுதான்
தேசத்தின் விளையாட்டல்ல
அது
தேசப்பெருமைக்குரிய
விளையாட்டும்மல்ல
மின்சாரத்தை
நேரத்தை வீணாக்கும்
வீண்வேலை
விழியிருந்தும்
பார்வையற்ற தேசம்
பாவமிகு ஜென்பம்
நாமன்றி யாருமில்லை
Subscribe to:
Posts (Atom)